Tuesday 26 May 2015

சுவையான சாப்பாடு சாப்பிட - ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம் - பழசு 2012

ம்


ஆளாளுக்கு சாப்பாட்டு கடைய பத்தி எழுதுறாங்க. நான் எவ்வளவு பெரிய சாப்பாட்டு பிரியன். நான் எழுதலைனா சாமி கண்ண குத்திடாதா. இதோ துவங்கிட்டேன். இந்த கட்டுரை படிக்கிறவங்களுடைய ருசியை தூண்டி விட்டா தோத்தவண்டா நிர்வாகம் பொறுப்பல்ல.

நேற்று வீட்டம்மாவுடன் ஷாப்பிங் சென்றிருந்தேன். ஷாப்பிங் முடிய 4 மணியாகி விட்டது. சாப்பிடாமல் இருந்ததால் பசித்தது (சாப்பிட்டா பசிக்குமான்னு கேள்விலாம் கேக்கப்பிடாது).அண்ணாநகரின் வழியாக வரும் போது சிந்தாமணி சிக்னலுக்கு அருகில் முதல் மெயின் ரோட்டில் ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம் கண்ணில் பட்டது.

கடையின் பெயர் வித்தியாசமாக இருந்ததை தவிர வேறு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடைக்குள் நுழைந்தோம். படிக்கட்டே வி்த்தியாசமாக இருந்தது. அண்டர்கிரவுண்டில் கடை இருந்தது. நுழைந்ததும் அருமையான உள்கட்டமைப்பு பார்க்கவே நன்றாக இருந்தது.

எல்லா இடங்களிலும் எல்சிடி டிவி துல்லியமான இசை. அரையிருட்டில் லைட்டிங். நல்ல சோபா செட் என எல்லாம் கவர்ந்தது. அருமையாக லாமினேட் செய்யப்பட்ட மெனு கார்டு. எழுத்துக்கள் எல்லாம் டைம்ஸ் நியு ரோமனில் இட்டாலிக்கில் படிக்க அருமையாக இருந்தது. ஒவ்வொரு பக்கமாக திருப்பி முழுவதும் படித்து விட்டு ஆர்டர் செய்தோம்.

எனக்கு நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, வான்கோழி பிரியாணி, மொகலாய் சிக்கன் மசாலா. என் வீட்டம்மா சைவமாதலால் டொமேட்டோ சூப், பனீர் டிக்கா, செஸ்வான் ப்ரைடு ரைஸ், பேபிகார்ன் மசாலா.

சர்வர் முதலில் டாட்டா வாட்டர் ப்ளஸ் வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தான். பிறகு சர்வர் கொண்டு வந்த நண்டு ரசத்தை ருசித்தேன். சிறிய நண்டு காலுடன் அதில் இருந்தது. நண்டின் காலில் கொடுக்கு இருந்தது அதிர்ச்சியை அளித்தது. சமாளித்துக் கொண்டேன். மசாலாவும் பெப்பரும் தூக்கலாக இருந்தது. சிறிது சிறிதாக சுவைத்தேன். நல்ல சுவையாக இருந்தது. (ஏம்ப்பா நான் சரியாத்தான் எழுதுறேனா)

நண்டு நன்றாக வெந்திருந்தது. சுவையாகவும் இருந்தது. கடித்து நொறுக்கி சாப்பிட்டவுடன் எங்கே துப்புவது என்று பார்த்தேன். எந்த மூலையும் அசுத்தமாக இல்லை. அடடே ஆச்சரியமாக இருந்தது. மேசையில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த டிஸ்யூ பேப்பரை விரித்து வைத்து அதில் துப்பி அழகாக மடித்து தட்டின் அருகிலேயே வைத்துக் கொண்டேன். சர்வர் அதனை கவனிக்காதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இடையில் பனீர் டிக்காவை வீட்டம்மாவின் தட்டிலிருந்து எடுத்து சுவைத்தேன். வெளியில் சூடு குறைவாக இருந்தது. அவர்கள் கொடுத்திருந்த பச்சை சாஸில் முக்கி எடுத்து ஒரு கடி. ஆ, அடப்பாவிகளா என் நாக்கில் சுட்டு விட்டு விட்டது. வெளியில் சூடு குறைவாகவும் உள்ளே கடும் சூட்டுடன் இருந்த ஒரு டிஷ்ஷை இப்போது தான் பார்த்தேன்.

பிறகு சர்வர் வந்து சதுரமான வெள்ளைக்கலர் பீங்கான் பிளேட்டை வைத்தார். நன்கு பளிச்சென்று இருந்தது அது. மற்ற அயிட்டங்களும் வந்து சேர்ந்தது. பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன். கிரேவியில் அவித்த முட்டையை துருவி போட்டிருந்தது பார்க்க கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

இரண்டையும் கலந்து அதில் சிறிது ப்ரெயின் ப்ரையை வைத்து முதல் கவளத்தை வாயில் வைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை சென்றடைந்தது. இதயம் சிலிர்த்தது. கண்கள் பனித்தது. அட அட அடடா தெய்வீக சுவையப்பா இது.

அடுத்த கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் ரெண்டாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

மூன்றாவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் மூன்றாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

நான்காவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் நான்காவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

தட்டில் பிரியாணி காலியாகி இருந்தது. ஒரு கிளாஸ் டாட்டா வாட்டர் பிளஸ் தண்ணீரை முழுவதும் குடித்தேன். அரை வயிறு திருப்தியாக நிறைந்திருந்து. மறுபடியும் பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன்.

முதல் கவளம்... அய்யோ அடிக்காதீங்கப்பா முடிச்சிக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன். சுவையான சாப்பாடு என்றால் அதுதான். சாப்பிட்டதில் மிகவும் சுவையை கொடுத்தது மொகலாய் சிக்கன் கிரேவி தான். முந்திரி பருப்பை அரைத்து செய்யப்பட்ட மசாலா ராயலான சுவையை சிக்கனுக்கு அளித்தது.

நீங்கள் சாப்பிட சென்றால் கூட ப்ளெயின் பிரியாணியையும் மொகலாய் சிக்கன் கிரேவியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் இலகுவாக கலந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையை உணர்வீர்கள்.

அது போலவே முட்டையை செமி பாயில்டாக மட்டன் ப்ரெயினுடன் கலந்து இருந்தது சுவையை கூட்டிக் கொடுத்தது. நேற்று சாப்பிட்டதன் ருசியை இப்பொழுது வரை உணர்ந்து கொண்டுள்ளேன் என்பதிலேயே உணவின் தரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

விலை தான் சற்று கூடுதலாக ரூ.900/- வந்தது. அதில் நான் கேட்காமலேயே கொண்டு வந்து வைத்த ரெண்டு வாட்டர் பாட்டிலுக்கும் நாற்பது ரூபாய் போட்டிருந்தது. அடடா பிரமாதம் போங்கள்.

நான் ஏழைப் பதிவர் என்பதால் கையில் காமிரா இல்லாததால் உணவத்தையோ, உணவையோ புகைப்படம் எடுக்க முடியவில்லை. எனவே இன்று புகைப்படமில்லா பதிவு மட்டுமே.

இந்த கட்டுரை கேபிள் சங்கரையோ மோகன் குமாரையோ நினைவுபடுத்துவதாக உங்களுக்கு தெரிய வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment