Tuesday 26 May 2015

திருவாரூரில் பறந்த நீர்ப்பறவை - பழசு 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் முடிந்து நேரே பழைய பேருந்து நிலையம் உள்ளே இருந்த பாருக்கு சென்றேன். பயலுவோ நல்ல மப்புல இருந்தானுங்க. இது மாதிரி சமயங்களில் நாம் படக்கென போதையாகி விட வேண்டும். இல்லையென்றால் நாம சிக்கிக்கிட்ட மாதிரி ஆகிடுவோம்.

பேசி சலம்பிக்கிட்டே இருந்தா மணி 09.30 ஆகிடுச்சி. அப்ப ஒரு நண்பன் நாம எல்லாம் படத்துக்கு போகலாம் என்று அடுத்த படி எடுத்து வைத்தான். ஏற்கனவே நான் படம் பாத்துட்டு தான் வந்தேன் என்று சொன்னால் ஏன் நான் கூப்பிட்டா வர மாட்டியா என்று அடுத்தவன் சீறிக் கிளம்ப சரி என்று முடிவாகி நீர்ப்பறவைக்கு செல்வது உறுதியானது.

உடனே கிளம்பி பார்வதி பாஸ்ட் புட் சென்று அவனவன் புடிச்சத சாப்பிட்டு விட்டு தியேட்டருக்கு கிளம்பினோம். கூடுதல் சரக்கு, புகைபோக்கி, பாக்கு போன்ற இத்யாதிகளை அவசர அவசரமாக ஷாப்பிங் முடித்து விட்டு திரையரங்கிற்குள் போனால் படத்தை போட்டிருந்தான்.

நந்திதா தாஸ் சோகமாக திரையை பார்த்து பேசிக் கொண்டு இருந்தார். இருக்கையில் அமர்ந்து ரெண்டு ரவுண்டு விட்டு படத்தை உற்று நோக்கினால் நம்ம ஹீரோ நமக்கு போட்டியாக சரக்கடித்து கொண்டு இருந்தார்.

படத்தின் ஸ்பெசலாக நான் கவனித்தது நேட்டிவிட்டி குறையாமல் எடுத்தது தான். நான் தூத்துக்குடி பக்கம் நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனம் 12 உயர் மட்ட நீர் நிலை தேக்கத் தொட்டி கட்டிய போது அதன் நிர்வாக அதிகாரியாக இருந்தவன்.

அந்த பகுதி மீனவ மக்களின் பழக்க வழக்கம், பேச்சு, சாப்பாடு வகைகள், சரக்கடிக்கும் முறை, மீன் பிடிக்க செல்லும் முறை, காதல்கள், திருட்டு சாராயம் விற்கும் இடம் என அனைத்தும் அறிந்து ஒரு வருடம் அவர்களுடனே வாழ்ந்தவன்.

எனக்கு ஒரு மிகப்பெரிய வீக்னஸ் உண்டு. யார் வீட்டிலாவது விருந்துக்கு அழைத்தால் கெளரவத்திற்கு கூட மறுப்பு சொல்லாமல் உக்கார்ந்து ஒரு கட்டு கட்டி விட்டு தான் நிமிர்வேன். அது போல் தூத்துக்குடி பகுதி மக்களின் எல்லா வகை சாப்பாடு, சரக்குக்கான சைட்டிஷ் என எல்லாத்தையும் அறிந்தவன்.
அந்த விஷயங்கள் அப்படியே படத்தில் அச்சு பிசகாமல் காட்டியிருந்தது என்னை படத்துடன் இயல்பாக ஒன்ற செய்தது. அந்த சுடுகாட்டில் சாராயம் விற்கும் இடத்தில் போதையை போடடு சலம்புவது, அங்கேயே தூங்குவது என எல்லாம் நமக்கு முன்னர் நடந்தது அப்படியே திரையில் பார்க்கும் போது புல்லரிக்க ஆரம்பித்தது. சொறிந்து கொண்டே படத்தை உற்று நோக்க ஆரம்பித்தேன்.

அது போல் அந்த ஹீரோயினின் வடிவமைப்பு. எப்படி வம்சம் படத்தில் எங்கள் ஊர்பக்கத்து பெண்ணாக இயல்பாக நடித்து என் மனதை அள்ளினாரோ அதே போல் கடற்கரை ஊதக்காத்தில் சற்று கருத்திருக்கும் மீனவ கிராமத்து பெண் போல இயல்பாக வந்து அள்ளுகிறார்.

வம்சம் படத்தில் ஒரு காட்சி வரும் ஜெயப்பிரகாஷை செருப்பால் அடித்து விட்டு வீட்டுக்கு கோபமும் வேகமுமாக நடந்து வருவார். அப்போது ரப்பர் செருப்பு போட்டுக் கொண்டு பாவாடையை சற்று தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கையில் பக்கெட்டுடன் வரும் போது என் மாமன் மகளைப் போலவே இருக்கும்.

அவரும் அப்படித்தான் வயல் வேலைகளை முடித்து விட்டு வருவார். சாதாரணமாக 75 கிலோ அரிசி மூட்டையை தூக்கி இடம் மாற்றுவார். நமக்கே பயமாக இருக்கும். என்னை விட 2 வயது பெரியவளாக இருந்ததால் நான் தப்பித்தேன். இல்லையென்றால் எனக்கு கட்டி வைத்திருப்பார்கள். பிறகு ஏதாவது சண்டை வந்தால் என்னையும் அலேக்காக தூக்கி பரணில் வைத்து மிரட்டியிருப்பார்.

அப்பாடா நீர்ப்பறவையை பற்றி எதுவும் சொல்லாமல் நீர்ப்பறவை என்று பெயர் போட்டுக் கொள்ள இரண்டு சம்பவங்களை பற்றி விவரித்து விட்டேன். பிறகென்ன படம் பார்த்து சில நாட்கள் கழித்து விமர்சனம் எழுத வேண்டுமென்றால் படத்தின் காட்சிகள் நினைவுக்கே வர மாட்டேன் என்கிறது. அதான் மேம்போக்காக கடந்து விட்டேன்.

நீர்ப்பறவை நேட்டிவிட்டியுடன் இணைந்த தமிழ் திரைப்படம். பார்த்து உணர்ச்சி வசப்பட வைக்கும் திரைப்படம். நேரம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment