Sunday 24 May 2015

அப்பா - பழசு 2012

எனக்கு தெரிந்து சிறு வயதிலிருந்தே என் அப்பாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்தது. எந்த குளிருக்கும் ஸவெட்டர் போட்டுக் கொள்ள மாட்டார். சிறு காய்ச்சலோ, ஜலதோஷமோ வராது. எனக்கு சிறு வயதில் இருந்தே என் அப்பாவைப் போல் எந்த உடல் நலக்குறைவையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டுமென்று முயற்சி கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட அன்றைய என் அப்பா,

சிறுவயதில் நான்காம் வகுப்பு படிக்கும் போது என்னை ஆசிரியர் அடித்ததால் தழும்பாகி விட்டது. என்னைக் குளிப்பாட்டும் போது அதனை பார்த்து விட்டு உடனடியாக வந்து ஆசிரியரை மிரட்டிய என் அப்பா,

நான் பதின்வயதில் ஒரு சினிமாவுக்கு பொய் சொல்லி விட்டு சென்று விட்டேன். ஆனால் நேரமாகி வீட்டுக்கு வராததால் நேராக பள்ளிக்கு சென்று என் வகுப்பு ஆசிரியரை "நீ தான் என் பையனை எங்கோ உன் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளாய், இன்னொரு முறை அனுப்பினால் உன்னை தொலைத்து விடுவேன்" என்று மிரட்டிய என் அப்பா,

பட்டயப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் நான் சுற்றிக் கொண்டிருந்த போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடிவந்த ரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளரை அணுகி எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து என் எதிர்காலத்தையே மாற்றிய என் அப்பா,

நான் ஒரு பெண்ணை காதலிப்பதை தெரிந்து கொண்டதும் என் தம்பியிடம் "அவன் வாழ்க்கையில் சம்பாதித்து விட்டு பொறுப்பானவனாக மாறிய பிறகு தான் காதலித்துள்ளான், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளட்டும்" என்று பொண்ணை பார்க்காமலே என் திருமணத்திற்கு சம்மதித்த என் அப்பா,

நான் வேலையை விட்டு விட்டு சொந்த நிறுவனம் தொடங்கி மிகப்பெரிய அளவுக்கு சரிவு ஏற்பட்டு சென்னையில் இருக்க முடியாத அளவுக்கு மனமொடிந்த நிலையில் இருக்கும் போது என்னை திருவாரூருக்கு அழைத்து சென்று மீட்டெடுத்த என் அப்பா,

இன்று என் அப்பா,

என் தம்பியின் திருமணத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு மலத்தில் ரத்தம் கலந்து போக ஆரம்பித்தது. உடல்சூடு அதிகமாகி இருக்கும் என்று உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார். ஆனாலும் ரத்தம் வருவது நிற்கவேயில்லை. பிறகு திருவாரூரில் உள் ஒரு மருத்துவரிடம் காட்டிய போது அவர் மருந்துகள் எழுதிக் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட பிறகு ரத்தம் வருவது நின்று போனது, ஆனால் வயிறு உப்ப ஆரம்பித்தது.

உடனடியாக திருவாரூரில் ஸ்கேன் செய்து பார்த்த போது மலக்குடலில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனையில் பயாப்ஸி டெஸ்ட் எடுத்தோம். ரிசல்ட் வர ஒரு வார தாமதமாகும் என்றும் தஞ்சையில் உள்ள சுடர் மருத்துவமனையில் மருத்துவரை அணுகினால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி விடலாம் என மருத்துவமனையில் தெரிவித்ததால் உடனடியாக அங்கு அட்மிட் செய்து ஆபரேசன் மூலம் கட்டியை தொடாமல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மலக்குடலை வெட்டி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தெரிவித்ததால் ஆபரேசனுக்கு நாள் குறிக்கப்பட்டது.

அது போல் அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் ஆபரேசன் துவங்கியது. என் அப்பாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் அது போக ஏகப்பட்ட ஒன்று விட்ட சகோதரிகள், சகோதரர்கள் என மருத்துவமனையில் ஆபரேசன் தியேட்டருக்கு எதிராக கூட்டம் கூடியது. ஆனால் நாங்கள் சாதாரண ஆபரேசன் என்று நினைத்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். மூன்று மணிநேரம் கழித்து சர்ஜன் எங்களை உள்ளே அழைத்தார். வெட்டி எடுக்கப்பட்ட குடல்பகுதியை காண்பித்து அதில் உள்ளது கேன்சர் கட்டி என்றார். அவ்வளவு தான். அந்த இடமே வேறு மாதிரியாக மாறி விட்டது. குடும்பத்தினர் அழ ஆரம்பித்தனர். அப்பா ஐசியுவில் நினைவில்லாமல் ஒரு நாள் முழுக்க இருந்தார்.

என்ன தான் பகுத்தறிவுவாதி என்றாலும், எவ்வளவோ ஆத்திகர்களுக்கு எதிராக சொற்போர் நடத்தியிருந்தாலும், கடவுள் ஒன்று இருந்தால் என் அப்பாவை காப்பாற்றட்டும் என்று வேண்டும் அளவுக்கு என் மனநிலை மாறியது. நானும் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தேன். அது வரை என் தம்பியிடம் பல மனஸ்தாபங்களால் பேசாமல் இருந்த நான் என் அப்பா தான் முக்கியம் என்று அவனிடமும் பேச ஆரம்பித்தேன்.

நேற்று முன்தினம் பயாப்ஸி ரிப்போர்ட் வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தது போல் தான் இருந்தது. டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு என் அப்பாவுக்கு கேன்சர் கட்டியை முற்றிலுமாக நீக்கியாகி விட்டது. வேண்டுமென்றால் கீமோதெரபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். இன்னும் குறைந்தது 10 நாட்களாவது அவர் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்றார்.

ஐந்து நாட்கள் ஐசியு வில் வைத்திருந்து நேற்று தான் தனி ரூமுக்கு என் அப்பாவை மாற்றினர். நான் வெளியில் சென்றிருந்ததால் அவர் கூப்பிடும் போது நான் இல்லை என்பதால் வந்ததும் திட்ட ஆரம்பித்தார். என் மனம் மகிழ ஆரம்பித்தது. பழைய கோவம் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் பலமாக திட்டவும் முடிந்தால் என்னை அடிக்கவுமாவது என் அப்பா உடல்நலம் தேறி வரவேண்டும். அவர் கையால் எத்தனை அடி வேண்டுமானாலும் வாங்க கண்ணீருடன் காத்திருக்கும்,

ஆரூர் மூனா

No comments:

Post a Comment