Tuesday 26 May 2015

பஞ்சேந்திரியா - சாம்பிள் பிரியாணியும் பதிவர் சந்திப்புக்கான முன்பதிவும் - பழசு 2012

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது ஐடிஐ மற்றும் அப்ரெண்டிஸ் இரண்டும் சேர்ந்த படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. குறைந்தபட்ச வயது 15. விண்ணப்பக் கட்டணம் ரூ40. SC/ST க்கு கட்டணம் ஏதுமில்லை.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அப்ரெண்டிஸ் முடித்தால் இரண்டு வருடத்தில் ரயில்வேயில் குறைந்தபட்சம் கலாஸி வேலை வழங்கப்பட்டு விடும். பட்டப்படிப்பு முடித்தவர்களே அரசுவேலைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற தலையால் தண்ணி (இதிலும் தண்ணியா) குடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் சரியான வயதில் உங்களது பசங்களை இதில் சேர்த்து விட்டால் அவனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்க.

அரசு வேலையை பற்றிய விவரங்கள் குறைவா பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். நானும் என் குடும்பத்தில் முதல் தலைமுறை ஆளாக ரயில்வே வேலையில் சேர்ந்தவன். எனக்கு கிடைத்த விவரம் அறியாத மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் வேறு எந்த வணிக நோக்கமும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்க. என்னால் இயன்ற விவரங்களை தருகிறேன்.

-----------------------------------------

சத்தியமா இவர் பதிவர் சந்திப்புக்கு வரமாட்டாருங்க சகோ


-----------------------------------

பெரம்பூர் கேரேஜ் மற்றும் லோகோ நுழைவாயில் முன்பாக 50 வருடங்களுக்கு மேலாக இருந்த டீக்கடைகள், பெட்டிக்கடைகள், இட்லிக்கடைகள் மற்றும் கேண்டீன்கள் ஆகியவைகளை இடித்து தள்ளிவிட்டனர். இடம் ரயில்வே இடமாக இருந்தாலும் பல வருடங்களை கடை வைத்து பிழைப்பு நடத்திய ஏழைகள் அவர்கள்.

இத்தனை நாட்களாக கோர்ட்டில் ஸ்டே ஆர்டர்கள் இருந்ததால் வெயிட் பண்ணிய ரயில்வே நிர்வாகம் ஸ்டே முடிந்த அன்றே அனைத்து கடைகளையும் இடித்து தள்ளி விட்டது. ஊழியர்கள் வேலை முடிந்ததும் டீ குடிக்க வெளியில் வரும் தொழிலாளர்கள் இப்பொழுது பல கிமீ தள்ளி சென்று தான் டீ கூட குடிக்க முடிகிறது.

சட்டப்படி பார்த்தால் ரயில்வே இடம் தான். அவர்கள் காலி பண்ணியதும் சரியானது தான். ஆனால் தொழிலாளர்களின் வசதியையும், ஏழை மக்கள் அன்றாடம் நூறு, இருநூறு சம்பாதித்ததில் மண்ணை அள்ளி போட்டு விட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ரயில்வே யூனியன்களும் கேட் மீட்டிங்குகளை நடத்தி வருகின்றனர்.

என்ன நடக்க போகிறதோ காலத்திற்கே வெளிச்சம்.

-------------------------------------

ராங் கனக்சன்


-----------------------------------

சாம்பிள் வாங்கி சாப்பிடுவது, வடிவேலு காமெடியிலும் மயில்சாமி காமெடியிலும் சூப்பர்ஹிட்டானது. அது போல் இன்றும் எனக்கு நடந்தது. நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். எங்களது கேங்கில் இருக்கும் ஒருவர் இந்த மாதத்துடன் ரிட்டையராக இருக்கிறார்.

ரிட்டையர்மெண்ட் பார்ட்டியாக சக தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் குவாட்டரும் கோழிபிரியாணி தருவதும் வழக்கம். ஏற்கனவே பிரியாணிக்கு ஒரு பார்சல் ரூ70 வீதம் ஒரு ஆளிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்.

நேற்று நான் வேலை முடிந்து வரும் போது வில்லிவாக்கத்தில் ஒரு கடையில் ஆப் பிரியாணி வாங்கினால் ஆப் பிரியாணி இலவசம் என்று போர்டு மாட்டியிருந்தது. உடனே உள்ளே சென்று ஆப் பிரியாணி சாப்பிட்டு விட்டு ஆப் பிரியாணி பார்சல் வாங்கி வந்தேன். அதனை எங்களது சக ஊழியரிடம் தெரிவித்த போது உடனடியாக அதனையே நாம் வாங்கி விடுவோம் என்று சொல்லி என்னையும் அந்த கடைக்கு அழைத்து வந்தார்.

140 பிரியாணிக்கு பணம் கொடுத்து விட்டு சகஊழியர் அவர்களிடம் ஏம்ப்பா இவ்வளவு பிரியாணிக்கு காசு கொடுத்திருக்கோம் சாம்பிள் கொடுக்கமாட்டீங்களா என்று கேட்டார். எனக்கு பயங்கர சிரிப்பாக வந்தது. அவர் முன் காட்ட முடியாதில்லையா, அடக்கிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்த ஆப் (எப்பா எவ்வளோ ஆப், சத்தியமா இது பிரியாணி மட்டும் தாங்க, வேற ஆப் இல்லீங்க)பிரியாணியை சாப்பிட்டு வந்தேன்.

சாம்பிள் பிரியாணி கூட ருசியாகத்தான் இருந்தது.

----------------------------------------

எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா


---------------------------------------

பதிவர் சந்திப்புக்காக வெளியூரிலிருந்து வரும் தோழர்கள் முன்பே தொடர்பு கொண்டு சொன்னால் தான் நன்றாக இருக்கும். இதுவரை நண்டு நொரண்டு, சிபி செந்தில் குமார், திண்டுக்கல் தனபாலன், சங்கவி, நக்கீரன் ஆகியோர் மட்டுமே என்னைத் தொடர்பு கொண்டு அறைக்கான தேவையை உறுதிப்படுத்தியுள்ளனர். வேறு யாராவது சனி இரவு தங்க அறை வேண்டியிருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். அப்பொழுது தான் அறை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

சர்ச்சைகள் பல இருந்தாலும் பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெறும்

ஆரூர் மூனா

No comments:

Post a Comment