Sunday 24 May 2015

சகுனி - செம மங்குனி - பழசு 2012

காலையிலேயே சினிமாவுக்கு போகணும்னு முடிவு பண்ணி வில்லிவாக்கம் நாதமுனில டிக்கெட் எல்லாம் நேத்தே எடுத்தாச்சு. ஆனா பாருங்க எப்போதும் காலையில் 10 மணிக்கெல்லாம் முடியற நம்ம வேலை இன்னைக்குன்னு 12 மணி வரை இழுத்துடுச்சு. என்னடா பண்ணுறதுன்னு ஆன்லைன்ல தம்பி சீனுகிட்ட அடுத்த ஷோ எங்கேன்னு பாக்க சொல்லி போன் போட்டேன்.

அவன் AGS ல டிக்கெட் புல்லு கோயம்பேடு ரோகிணில கிடைக்கும்ணே முயற்சித்துப் பாருங்கள்னு சொல்லவே நான் கோயம்பேடு நோக்கி சக நண்பன் அசோக்குடன் பைக்கில் கிளம்பினேன். எப்படியும் AGS வழியாத்தான் போகணும் முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோணவே தியேட்டரில் இறங்கி கேட்டால் 12.30 காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. காலையில் கடுமையான வேலை லன்ச் சாப்பிடவில்லை.

டிக்கெட் எடுத்து உள்ளே செல்லும் போது உள்ளே காஸ்ட்லியாகத்தான் இருக்கும் தண்ணி குடிச்சாவது படம் முடியும் வரை பசியைத் தள்ளி போடுவோம் என்று நினைத்து தண்ணீர் பாட்டில் எவ்வளவு என்று கேட்டால் 20 ரூபாய் என்று சொன்னாள் ஒரு பணிப்பெண். ஆகா சீப்பா இருக்கிறதே என்று பாட்டில் வாங்கினால் அது அரை லிட்டர் பாட்டில். அடப்பாவிகளா இப்படியா ஏமாத்துவானுங்க. படம் வேற போட்டுட்டானுங்க. சண்டைய பிறகு வச்சிக்கலாம் என்று திட்டிக் கொண்டே உள் சென்றேன்.

தியேட்டரும் ஹவுஸ்புல். இவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் நிறைவேற்றியதா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். என்னடா குழப்புகிறேன் என்று நினைக்கிறீர்களா படம் பார்த்த குழப்பம் எனக்கே தெளியவில்லை. பிறகெங்கே நான் உங்களுக்கு விளக்க.

படத்தின் கதை என்ன? காரைக்குடியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் லெவல் கிராசிங்கில் அரசாங்கம் பாலம் கட்ட முடிவெடுத்து அதற்காக கார்த்தியின் வீட்டை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதனை தடுக்க வேண்டி சென்னைக்கு வரும் கார்த்தி முதல்வரான பிரகாஷ்ராஜை சந்தித்து முறையிட அவர் கார்த்தியை திட்டி அனுப்ப கோவம் கொள்ளும் கார்த்தி சகுனி வேலை செய்து பிரகாஷ்ராஜை பதவியிலிருந்து இறக்கி தன் வீட்டை காப்பாற்றிக் கொள்கிறார் என்பதை இரண்டரை மணிநேரம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி ஒரு எனர்ஜி ஹீரோ. அவரின் காட்சிகள் நமக்கும் அவருடன் கதையில் ஒன்ற வைக்கிறது. நன்றாக நடிக்கிறார். நடனத்தில் அசத்துகிறார். ஆக்ஷனும் இயல்பாக வருகிறது. எல்லாவற்றையும் விட காமெடி தான் அவருக்கு கைவந்த கலையாகிறது. தலைநகரில் மிக முக்கிய கதாநாயகர்களுக்கு மட்டுமே நடக்கும் காலை எட்டு மணி காட்சி அனைத்து தியேட்டரிலும் செல்வதிலேயே அவருக்கு இருக்கும் மவுசை தெரிந்து கொள்ளலாம்.

ப்ரணிதா பாடல்களுக்கு நடனமாடி விட்டு கிளைமாக்ஸில் ஹீரோவுடன் சேர்ந்து கொள்ளும் தமிழின் வழமையான கதாநாயகி. பார்ப்பதற்கும் சிறப்பான முகத்தோற்றம் இல்லையென்பது என்னுடைய கருத்து. நடிக்கவும் வரவில்லை.

பிரகாஷ்ராஜ் எல்லாப் படங்களிலும் வரும் அதே போன்ற வில்லத்தனமான கேரக்டர். அவருக்கு பெரியமேட்டில் பிரியாணி சாப்பிடுவது மாதிரி. டபுள் பிளேட்டாக சாப்பிடுகிறார்.

அனுஷ்காவுக்கு 10 நிமிடம் வரும் ஒரு மலையாள சேச்சி கேரக்டர். கதாநாயகியை விட இவருக்கே அதிக விசில் பறக்கிறது. எதுக்கென்றே தெரியாமல் ஒரு கிளப் டான்ஸ் காட்சியில் ஆண்ட்ரியா. ரோஜாவும் ஸ்டார் காஸ்ட் வேண்டுமென்று சேர்க்கப்பட்டிருக்கிறார்.

எல்லாரையும் முக்கியமாக கதாநாயகனையும் சேர்த்து சாப்பிடும் கேரக்டரில் சந்தானம். கேரக்டரை அலேக்காக தூக்கி சாப்பிடுகிறார். குடிகாரர்களை பற்றி இவர் அடிக்கும் லெக்சருக்கு தியேட்டரே எழுந்து விசில் அடித்து ஆதரவு தெரிவிக்கிறது. கார்த்தியின் ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சிக்கும் அவர் அடிக்கும் கவுன்ட்டருக்கு தியேட்டரில் ஆனந்த கரகோஷம் தான்.

எல்லாம் நன்றாக இருப்பது போல் இருக்கிறது அல்லவா. ஆனால் எதுவுமே நன்றாக இல்லை என்பது தான் உண்மை.

இவர் ஆலோசனை சொன்னதும் அதைக் கேட்டு நடந்து ராதிகா கவுன்சிலரார். பிரகாஷ்ராஜ் கூப்பிட்டு திட்டியதும் கோவப்பட்டு ராதிகாவை ஜடியா பண்ணி மேயராக்குகிறார். ரோட்டு சாமியாராக இருந்த நாசர் இவரின் ஆலோசனைகளை பின்பற்றியவுடன் புட்டபர்த்தி சாயிபாபா லெவலுக்கு உயர்கிறார். ஐந்து தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கோட்டா சீனிவாசராவை இவர் ஆலோசனையை கேட்டு முதல்வராகிறார் என நம் காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றுகிறார்கள்.

லாஜிக் இல்லாத காட்சியமைப்பு நம்பகத்தன்மையில்லாத திரைக்கதை, தேவையில்லாத இடங்களில் பாடல் காட்சி என எல்லாமே ஒரு தோல்விப்படத்திற்கு உள்ள அம்சங்களாகவே உள்ளது. ஆனாலும் ரஜினி கமல் என்ற கேரக்டர்களில் வரும் கார்த்தியும் சந்தானமும் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

ஏன் ஒடியது என்று தெரியாமலே ஒடிய கலகலப்பைப் போல் இதுவும் ஒடிவிடும்.

சகுனி - செம மங்குனி

ஆரூர் மூனா

No comments:

Post a Comment