Sunday 24 May 2015

இலங்கை முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் கடைசி நாள்... - பழசு 2012

.



இலங்கையில் 1988ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார். பிரேமதாசாவுக்கு 25,69,199 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமதி பண்டாரநாயகாவுக்கு 22,99,770 ஓட்டுகளும் கிடைத்தன.

தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரேமதாசா 1989ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி அதிபராக பதவி ஏற்றார். பிரேம தாசா புத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்.

மே தினத்தை முன்னிட்டு, இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு நகரில் 01.05.1993 அன்று ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊர்வலத்துக்கு பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு "ஜீப்"பில் சென்றார். நகரின் மையப்பகுதியான ஆர்மர் தெரு வில் பகல் 12.45 மணி அளவில் ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தது.

அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் பிரேமதாசாவின் "ஜீப்" மீது மோதுவதற்காக நெருங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை தடுத்து நிறுத்தியபோது, அவன் தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

குண்டு வெடிப்பில் சிக்கி பிரேம தாசா உடல் சின்னாபின்னமாகி மரணம் அடைந்தார். குண்டை வெடிக்கச் செய்த மர்ம மனிதனும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் சிதைந்து செத்தான். குண்டு வெடிப்பில் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள் 6 பேர் உள்பட 40 பேர் பலியானார்கள். இவர்களில் 16 பேர் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதறிப்போய்விட்டன. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.

குண்டு வெடித்த ஆர்மர் தெரு ஒரே ரத்தக் களறியாக காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பீறிட்டு அடித்த ரத்தமும், மனித தசைகளுமாக காணப்பட்டன. பிரேமதாசாவுக்கு பின்னால் கார்களில் வந்து கொண்டிருந்த மந்திரிகள் உயிர் தப்பினார்கள். குண்டு வெடிப்பில் பிரேமதாசா காயத்துடன் தப்பி விட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அவர் என்ன ஆனார் என்று அரை மணி நேரம் குழப்பம் நிலவியது. பிறகு அவரது உடல் சின்னா பின்னமாக சிதறிப் போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குண்டு வெடித்த மர்ம மனிதன் மோட்டார் சைக்கிளில் வந்தான் என்றும், நடந்து போய் பிரேமதாசாவை நெருங்கினான் என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவித்தன. இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கொழும்பு நகரில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். அதன் பிறகே டெலிவிஷன் மூலம் பிரேமதாசா படுகொலை செய்தி அறிவிக்கப்பட்டது. இலங்கை பிரதமராக இருந்த விஜயதுங்கே தற்காலிக அதிபராக (ஜனாதிபதி) நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பிரேமதாசா படுகொலை குறித்து ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, துணை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தார்கள். இலங்கை தற்காலிக ஜனாதிபதிக்கு ஒரு அனுதாப செய்தி அனுப்பினார். பிறகு 6ந்தேதி பிரேமதாசா இறுதிச்சடங்கு நடந்தது.

பிரேமதாசா கொலை செய்யப்பட்ட இடத்திலேயே கொலைகாரனின் துண்டித்த தலை கைப்பற்றப்பட்டது. அந்த தலை எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது. கண்கள் மூடிய நிலையிலும், வாய் திறந்த நிலையிலும் இருந்தது. தூங்கும் ஒரு மனிதன் போல அந்த தலை காணப்பட்டது.

துப்பறியும் போலீசார் அந்த தலை படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டனர். இலங்கை ரூபவாகினி டெலிவிஷனிலும் அந்த தலை காண்பிக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் கொலையாளி யார் என்ற அடையாளம் தெரிந்து விட்டது. பிரேமதாசாவின் வீடு, கொழும்பு நகரில் `சுசரிதா' என்ற பகுதியில் இருந்தது. கொலையாளியும் அதே பகுதியில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தவன் என்பது தெரியவந்தது.

கொலையாளியின் பெயர் பாபு. இவன் ஓட்டலில் பகுதி நேர வேலை பார்த்து வந்தான். பிரேமதாசாவின் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் பாபு தங்கியிருந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரரான ஓட்டல் அதிபர் ஒருவரும், பக்கத்து வீட்டுக்காரரும் பாபுவை அடையாளம் காட்டினார்கள். ஆனாலும் கொலைக்கான காரணம் தெரியவராமல் மர்மமாகவே இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி 1 : இந்த காலகட்டத்தில் எனக்கு 14 வயது நான், என் குடும்பத்தார் அனைவரும் ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலாவுக்கு சென்றிருந்தோம். மைசூர் உள்ளே நுழைகையில் ராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். சாதாரண செக்யூரிட்டி செக்கப்பாகத்தான் நினைத்தோம். ஆனால் அவர்கள் எங்களிடம் இருந்த புளிசோறு இருந்த குண்டானையும் பிரட்டி போட்டு சோதனை செய்தனர். அப்போது எங்களுக்கு காரணம் புரியவில்லை. மைசூர் நகரில் உள்ளே நுழைந்த பிறகு தான் ஒரு டீக்கடைக்காரர் சொன்னார். இந்த மாதிரி பிரேமதாசா கொல்லப்பட்டார் என்று. இப்பொழுது பதிவெழுத பக்கங்களை புரட்டும் போதுதான் தெளிவான விவரங்கள் தெரிய வந்தன. அதனை தங்களுக்கு பகிர்கிறேன். நன்றி

டிஸ்கி 2 : இந்த கட்டுரையில் தகவல் மாறுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் தகவல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதனையும் கட்டுரையில் இணைத்து வெளியிடுகிறேன்.

No comments:

Post a Comment