Sunday 24 May 2015

விபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம் - பழசு 2012

நேற்று ஐசிஎப் அருகில் வண்டியில் போய் கொண்டு இருக்கும் போது ஸ்கூட்டி ஒன்று விர்ர்ரென்று சென்றது. சற்று தூரத்தில் சென்று விபத்துக்குள்ளானது அந்த வண்டி. அவசர அவசரமாக சென்று பார்த்தால் ஓட்டிச் சென்றவன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். கை கால்களில் நல்ல அடி.

எல்லோரும் அவனை திட்டி விட்டு சென்றார்கள். நான் அங்கேயே இருந்து அவன் அப்பாவின் போன் நம்பரை வாங்கி போன் செய்து விவரம் சொல்லி விட்டு நன்றாக திட்டியும் விட்டு வந்தேன். வரும் வழியில் எனக்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது.

சிறுவயதில் நான் புதிதாக டூவீலரை ஓட்டக் கற்றுக் கொண்டது, அதன் பிறகு எந்த டூவீலர் வீட்டிற்கு வந்தாலும் எடுத்துக் கொண்டு ரெண்டு சுற்று சுற்றிய பிறகு தான் தாகம் அடங்கும். வண்டி ஓட்டும் வேகம் சரியான வயதிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். நானும் அதனை தெரிந்து கொண்டேன் நான்கைந்து விபத்துகளை சந்தித்த பிறகு.

முதல் முதலாக என் அப்பா வாங்கியது TVS 50 வண்டி. திருவாரூருக்குள் அந்த வண்டியை வைத்துக் கொண்டு சுற்றாத தெருவே கிடையாது. அப்பொழுது நாங்கள் திருவாரூர், தியாகராஜ நகரில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்தோம். என் அம்மா ஒரு உதவிக்காக ரேவதி அக்காவை வடக்கு வீதியிலிருந்து அழைத்து வர சொல்லியிருந்தார்கள். நான் TVS 50யை அப்பாவுக்கு தெரியாமல் எடுத்துக் சென்று ரேவதி அக்காவை அமர வைத்து படுவேகமாக துர்காலயா ரோட்டில் வந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று எதிரில் லாரி வந்ததும் உடனே பிரேக்கை அழுத்திப் பிடித்தேன். அடுத்த வினாடி வண்டி நிலை தடுமாறி நான் கீழே வண்டி என் மேலே கிடந்தது. ரேவதி அக்காவை காணவில்லை. எழுந்து பார்த்தால் சாலையோரம் இருந்த வேலியின் மீது விழுந்து கிடந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் காயத்துடன் வீட்டிற்கு சென்றோம். பிறகென்ன வீட்டில் எங்க அப்பா கட்டி வைத்து சோத்துக்கத்தாழை செடியாலேயே அடித்து என் தோலை உரித்து விட்டார்.

அடுத்ததாக நான் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கம்பெனிக்கு சொந்தமான ஸ்கூட்டர் ஒன்று திருவாரூரில் உள்ள சர்வீஸ் சென்டரில் விடப்பட்டிருந்தது. வண்டி ரெடியானதும் நான் சென்று வண்டியை எடுத்துக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்.

ஆலத்தம்பாடி என்ற ஊரின் அருகே வந்த போது வண்டி ஆடியது. சரி வண்டி பஞ்சாகி கொண்டிருக்கிறது போல. வேகமாக சென்றால் திருத்துறைப்பூண்டிக்கு சென்று விடலாம் என்று வண்டியை முடுக்கினேன். சிறிது தூரம் சென்ற பிறகு தடாலென்று சத்தம் மட்டும் கேட்டது. நான் ரோட்டின் எதிர்ப்புறம் கிடந்தேன். வண்டியைப் பார்த்தால் முன் சக்கரத்தை காணவில்லை.

தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் ஒடி வந்தனர். என்னை தூக்கி விட்டு வயலின் நடுவில் கிடந்த சக்கரத்தை கொண்டு வந்து கொடுத்தனர். எனக்கு கை முறிந்திருந்தது. வண்டியை அங்கேயே சைடு லாக் செய்து விட்டு வழியில் வந்த வண்டியில் ஏறி அலுவலகம் சென்றேன்.

பிறகு என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் சேர்ந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மருத்துமனைக்கு என்னை அழைத்து சென்றனர். எனக்கு எக்ஸ்ரே எடுத்து முறிந்த இடத்தை அறிந்து கட்டு கட்டி விட்டார் ஒரு நர்ஸ். மற்றவர்கள் அலுவலகம் சென்று விட சந்துரு மட்டும் என்னுடன் இருந்தான்.

சிறிது நேரத்தில் அவனை காணவில்லை. கைவலி அதிகமாகவே நர்ஸை அழைத்தேன். அவரையும் காணவில்லை. கத்தி கத்திப் பார்த்து தூங்கி விட்டேன். நடுஇரவில் இயற்கை உபாதைக்காக எழுந்து பார்த்தால் கட்டிலின் கீழே தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பி எங்கேடா போன என்றேன். அவன் வெட்கப்பட்டுக் கொண்டே நர்ஸை காதல் பார்வை விட்டு கவிழ்த்த கதையை சொன்னான். கருமம் என்று திட்டினேன். சில மாதங்களுக்கு பிறகு சந்துரு நர்ஸை திருமணம் செய்து கொண்டது தனிக்கதை.

அதற்கடுத்தாக சென்னைக்கு வந்து விட்டிருந்தேன். என் அலுவலகத்திலிருந்து புதிதாக என் கம்பெனிக்காக தாம்பரத்தில் எடுக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்காக சில பொருட்களை எடுத்துக் கொண்டு என்னுடன் சக நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.

ஆலந்தூர் ஆசர்கானாவை அடுத்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வேகமாக சென்று கொண்டிருந்த நான் வண்டியை திருப்பினேன். அங்கே ரோட்டில் கொட்டியிருந்த மணலில் சறுக்கி தேய்ந்து கொண்டே போய் விழுந்தோம். எழுந்து பார்த்தால் நெஞ்சு முழுக்க சிராய்ப்பு. தலை மற்றும் இடதுகையில் சிராய்ப்பு. உடல்நலம் சரியாக பதினைந்து நாட்கள் ஆனது. அதன் பிறகு படிப்படியாக வேகமாக செல்வது 80kmphலிருந்து 60kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

பிறகு கேரளாவில் ஒரு கட்டுமானத்திற்காக பணிபுரிந்து கொண்டிருந்த போது பஜாஜ்M80யில் சென்று கொடிருந்தேன். எதிரில் படுவேகமாக வந்த நாதேரி ஒருத்தன் சட்டென்று பிரேக் பிடிக்க முயன்று முடியாமல் சாதுவாக வந்து கொண்டிருந்த என் மீது மோதி விட்டான். இடது கையில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு வேகமாக செல்வது 60kmphலிருந்து 40kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

எல்லோருக்கும் அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு வந்து விட்டால் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளலாம். கண்டிப்பாக அதிக வேகம் என்பது விபத்து நடப்பதற்கான சாத்தியக்கூறை அதிகமாக்குகிறது. அதுவும் சரக்கடித்து விட்டால் அது இரட்டிப்பாகிறது.

அடுத்ததாக ஒரு விபத்து ஏற்பட்டால் வண்டியின் வேகத்தை நான் 10kmph ஆக குறைக்க வாய்ப்பிருப்பதால் இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது என்று கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment