Tuesday 26 May 2015

முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணிநேரம் - பழசு 2012

கடந்த திங்களன்று குடவாசல் அருகில் இருந்த என் சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர்கள் வீட்டில் சன்டைரக்ட் வைத்து இருந்தார்கள். நான்கு ஆயாக்கள் அமர்ந்து சன்டிவியில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் அன்று பார்த்து டிஷ்ஷில் சிக்னல் சரிவர கிடைக்காமல் போகவே அவர்களுக்கு வேறு பொழுது போக்கும் இல்லாமல் இஷ்டம் போல் சிக்னல வந்த சானல்களை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என் அம்மா, என் வீட்டம்மா, அந்த வீட்டு அத்தை ஆகியோர் அங்கிருந்து கிளம்பி தோட்டத்திற்கு கீரை பறிக்க போயிருந்தார்கள். நான், என் அப்பா, மாமா மற்றும் நாலு ஆயாக்கள் மட்டுமே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். சானலை அப்படி மாற்றிக் கொண்டு வரும் போது ஜெமினி டிவியில் முட்டா மேஸ்திரி படம் போய்க் கொண்டிருந்தது.

வேறு வழியில்லாமல் அந்தப் படத்தையே பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே நான் என்னுடைய பதினாலு, பதினைந்து வயதில் மாண்புமிகு மேஸ்திரி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்ட படமாக பார்த்திருந்தேன். அந்த வயதில் சினிமாவைப் பற்றிய அறிவு குறைவாக இருந்ததால் மோசமான தாக்கம் ஏற்படவில்லை.

நான் ஒரு நிறுவனத்தில் இதற்கு முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வேலை பார்த்த ஆந்திரக்காரர்கள் "ஈ பேட்டைக்கு நேனே மேஸ்திரி, முட்டா மேஸ்திரி" என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். நான் பயங்கர ஹிட்டான படம், தெலுகு சினிமாவில் சிறந்த கதையம்சமுள்ள படம் போல என்று நினைத்திருந்தேன்.

ஒட்டு மொத்த எண்ணத்தையும் நான் பார்த்த கடைசி முக்கால் மணிநேர படம் மாற்றியது. நம்ம வீட்டம்மா தெலுகு அம்மாயி, சிரஞ்சீவி ரசிகை வேறு. நான் இப்படி கலாய்த்து எழுதுவது தெரிந்தால் நமக்கு வேப்பிலையோ நமஹ மந்திரம் தான். படிக்க மாட்டார் என்ற எண்ணத்துடன் தான் இதனை எழுதுகிறேன்.

நான் பார்க்க ஆரம்பித்த சமயம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வில்லனின் மகன் ஸ்ரீஹரி ஒரு குற்றம் செய்து விட வழக்கில் முக்கிய சாட்சியாக முன்னாள் மேஸ்திரியும் அமைச்சருமான சிரஞ்சீவீ சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் குற்றம் நடந்த சமயத்தில் ஸ்ரீஹரி வேறு ஒரு நிகழ்ச்சியில் இருந்தார் என்று வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள்.

அதனை மறுக்க முடியாத சிரஞ்சீவி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வர முயற்சிக்கிறார். அப்பொழுது ஒரு இஸ்லாமியர் கோர்ட்டுக்கு வெளியே தொழுகை நடத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறார். டக்கென் அவருக்கு ஒரு ஐடியா முளைக்கிறது!!! (தலைக்கு மேல இல்லைங்க, உள்ளேயே தான்).

மீண்டும் அதே வீடியோவை போடும் படி நீதிபதியை வற்புறுத்துகிறார். நீதிபதி சொல்லவே வீடியோ திரையிடப்படுகிறது. வீடியோவில் நிகழ்ச்சி நடக்கும் பின்புலத்தில் மசூதியில் தொழுகை நடத்தும் சத்தம் கேட்கிறது. உடனே சிரஞ்சீவி இசுலாமியர்கள் எப்பொழுதுமே 11 மணிக்கு தொழுகை நடத்த மாட்டார்கள். எனவே குற்றம் நடந்த 11 மணிக்கு எப்படி தொழுகை நடத்தும் சத்தம் கேட்கும் என்று நீதிபதியையே மடக்கி ஸ்ரீஹரியை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

இதனை கண்டு கொதித்தெழும் வில்லன் சிரஞ்சீவியின் தங்கையான யுவராணியை ஒரு பார்ட்டியில் மயக்க மருந்து கொடுத்து விபச்சார வழக்கில் சிக்க வைக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு சிரஞ்சீவி கோர்ட்டுக்கு வருவதற்குள் நீதிபதி தீர்ப்பை வழங்கி விடுகிறார். துக்கம் தாங்காத யுவராணி கோர்ட்டில் காவலுக்கு இருந்த கான்ஸ்டேபிளின் துப்பாக்கியிலிருந்து கத்தியை எடுத்து ஒரு நிமிடம் யோசித்து பார்க்கிறார்.

பிளாஷ்பேக்கில் சிரஞ்சீவி அம்மா நம்ம குடும்பம் ஆஸ்தி இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஊரில் ஒழுக்கமான குடும்பம் நம்முடையது தான். அதற்கு ஆபத்து ஏற்பட்டால் என்று முடிக்கிறார். பிளாஷ்பேக்கை யோசித்த யுவராணி சிரஞ்சீவி வரும் வரை காத்திருந்து வந்ததும் கத்தியை எடுத்து தன் வயிற்றில் குத்திக் கொண்டு செத்துப் போகிறார்.

உடனே புலனாய்வு செய்து காரணகர்த்தாவை கண்டுபிடிக்கும் சிரஞ்சீவி ராஜினாமா கடிதத்தை எழுதி அருகில் வேர்கடலை விற்றுக் கொண்டிருந்தவனிடம் கொடுத்து முதல்வரிடம் கொடுக்கச் சொல்லி ஒரு மணிநேரத்தில் தாடி வளர்த்து லுங்கி கட்டி வில்லனின் கையாளான இன்ஸ்பெக்டர் மன்சூரலிகானை அடித்து துவைக்கிறார்.

அந்தப்பக்கம் தேமே என்று கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு கான்ஸ்டேபிள்களை மன்சூரலிகானின் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொல்கிறார். பத்து குத்து, பதினைந்து உதை வாங்கியதும் வில்லனின் மகனை தப்ப வைக்க வில்லன் முயற்சிக்கும் விவரத்தை மன்சூரலிகான் சொல்கிறார்.

அது டவர் கிரேன் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அதனை படத்தில் வைத்து புதுமை காட்ட முயற்சித்து இருக்கிறார்கள். தசரா ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கும் போது இந்த வழியாக வரும் போலீஸ் வேனை மடக்கி வில்லனின் ஆட்கள் அப்பாவி போலீஸ்கள் 50 பேரை சுட்டுக் கொன்று விட்டு ஸ்ரீஹரியை தப்ப வைக்கிறார்கள்.

நம்ம சென்னையில் ஸ்ட்ரீட் லைட் ரிப்பேர் செய்ய ஒரு கூண்டுடன் கிரேன் இருக்குமே. அதனை எடுத்து டவர் கிரேனுடன் இணைத்துக் கட்டி ஸ்ரீஹரியை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கும் போது சிரஞ்சீவி எண்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு தோதாக பக்கத்தில் ஒரு தட்டில் குங்குமம் இருக்கிறது.

சிரஞ்சீவி வில்லனை பொளேரன்று அடிக்க அவர் தட்டின் மீது விழுகிறார். திரையெங்கும் குங்குமம் பறக்கிறது. அடுத்த தட்டு மஞ்சள் பவுடர், தடுமாறி எழும் வில்லனை ஒரே கும்மாங்குத்து குத்த வில்லன் மஞ்சள் தட்டு மீது விழுகிறார். மஞ்சள் தூள் பறக்கிறது. ஒரு பக்கம் சிவப்பு நிறம், மறுபக்கம் மஞ்சள் நிறம் நடுவில் சீரஞ்சீவி நடந்து வருகிறார்.

எனக்கே தொண்டை கிழிய விசிலடிக்க வேண்டும் போல் தோன்றியது. அப்பா அருகில் இருக்கிறார் என்பதற்காக அடக்கிக் கொண்டேன். பிறகென்ன ரொம்ப நேரம் கழித்து கிரேன் டிரைவரை அடித்து விட்டு அலேக்காக ஸ்ரீஹரியை தன்பக்கம் கொண்டு வந்து இருவரையும் கொன்று விட்டு மீண்டும் மார்க்கெட்டுக்கே வந்து மேஸ்திரியாகி தனது வேலையை பார்க்கிறார்.

முதலமைச்சர் அவரைத் தேடி அங்கேயே வருகிறார். அவரிடம் சிரஞ்சீவி "கடலை விற்பவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தேனே உங்களுக்கு வரவில்லையா" என்று கேட்க அவரோ "கொடுத்தானப்பா, கொடுக்கும் போது அதில் கொஞ்சம் கடலையையும் மடித்து கொடுத்தான், கடலையை தின்று விட்டு கடிதத்தை தூக்கி எறிந்து விட்டேன் நீ மீண்டும் அரசியலுக்கு வா, இந்த முறை அமைச்சராக அல்ல, முதலமைச்சராக" என்று சொல்கிறார்.

அதற்கு சிரஞ்சீவி "நான் இப்பொ எழுபத்தைந்து பேருக்கு மேஸ்திரியாக இருக்கிறேன். காலம் சம்மதித்தா ஏழரை கோடி பேருக்கும் மேஸ்திரியாகி விடுவேன், இப்ப இந்த பதவி வேண்டாம்" என்று சொல்லி விட்டு மீனாவையும், ரோஜாவையும் அழைத்துக் கொண்டு போய் யானை வெடியின் மீது கலர் பவுடரை கொட்டி வைத்து அதனை வெடிக்க செய்து டமக்கு டப்பான் என்று டான்ஸ் ஆடி படத்தை முடித்து வைக்கிறார்.

படம் முடிந்ததும் உக்காந்திருந்தவர்களில் யாருக்குமே எழுந்து போக வேண்டும் என்று தோணவேயில்லை. ராஜேந்திர குமாரின் ஸ்டைலில் ஙே என்று முழித்துக் கொண்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சத்தியமா சொல்றேன், இப்பக்கூட பாத்ததை மட்டுமே எழுதணும்னு தோணுது. எப்படி கலாய்ச்சி எழுதுறதுன்னு யோசிச்ச உடனே மஞ்சள் புகையும் சிகப்பு புகையும் சூழ சிரஞ்சீவி என்னை நோக்கி வந்து கலவரப்படுத்துற மாதிரி திகிலாவே இருக்குது. டேய் ஆந்திர மனவாடுகளா நல்லாயிருப்பீங்கடா.

அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத்திரி தூக்கத்திலேயே அலறுச்சி. அதுக்கு என்ன மாதிரி மெரட்டல் கனவுல வந்துச்சோ.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment