Tuesday 26 May 2015

நிலை கொள்ளா மனது - பழசு 2012

தலைப்பை பார்த்ததும் ஏதோ ராணி முத்து, கண்மணி போன்ற இதழ்களில் வரும் குடும்ப நாவல் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. ஏற்கனவே கவிதை எழுதுகிறேன் என்று முயற்சித்து எதைப் பேசினாலும் எதுகை மோனையாகவே வருகிறது. இதில் குடும்ப நாவல் வேறயா என்று நினைக்க வேண்டாம் மக்களே.

சனியன்று திருப்பூர் செல்ல பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது. மெட்ராஸ் பவன் சிவா பேருந்து நிலையத்தில் காத்திருக்க நான் கிளம்ப நேரமாகி விட்டது. குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்ற பதட்டம் கூட ஆரம்பித்தது. வண்டியை வேகப்படுத்தி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பியது. ஏறி அமர்ந்து விட்டேன். அன்று ஆரம்பித்த பதட்டம், இன்று வரை குறையாமல் இருந்து என்னை இது போன்ற தலைப்புகளில் எல்லாம் எழுத வைத்து விட்டது.

ஞாயிறு மட்டும் திருப்பூரில் நண்பர்களுடன் மகிழ்வாக சென்று விதிவிலக்காக அசத்தியது. நண்பர்கள், வீடு சுரேஷ், இரவுவானம் சுரேஷ், சசிமோகன் குமார், நா. மணிவண்ணன் ஆகியோருடன் மாலை மகிழ்வுடனே எங்களுக்கு கடந்தது.

திங்கள் அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை எங்கும் தனியாக அனுப்புவதில்லை. ஏப்ரலில் பெருங்குடலில் புற்றுநோய்க்கட்டி அகற்றிய பிறகு, சில மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பிறகு அவருக்கு உடலில் பலம் சுத்தமாக குறைந்து விட்டது.

கூட்டுறவுத்துறையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தவர், ஓய்வு பெற்ற பிறகும் கூட சும்மா இருக்கக்கூடாது என்று நினைத்து ஜெராக்ஸ், டைப்பிங் கடை வைத்து நடத்தியவர். இன்று தனியாக எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை.

கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது. இந்த எலும்புக்கிடையில் ஒரு நரம்பு உராய்வதால் கை கால்கள் எந்நேரமும் மரத்து போய் இருக்கின்றன. தனது சட்டையின் பொத்தானை தானே கழற்ற முடியாது, மற்றொருவர் துணையுடன் தான் கழற்ற முடியும்.

இன்று ரயில்வே மருத்துவமனைக்கு சென்று ஆர்த்தோ, நியுரோ மற்றும் பிஸியோதெரபி துறை வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து வந்தோம். அவர்கள் விஹெச்எஸ் மருத்துவமனைக்கு சென்று நியுரோ சர்ஜனை கலந்தாலோசிக்கும்படி ரிப்போர்ட் தந்தார்கள். நாளை அவருக்கு ஊரில் வேலை இருந்ததால் அடுத்த வாரம் தான் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

இன்று ஊருக்கு திரும்பி சென்றார். பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் சிறுநீர் கழிக்க வேண்டுமென்று கழிப்பறைக்கு சென்று வந்தவர், கை மரத்து போனதால் பேண்ட்டின் ஜிப் எங்கு இருக்கிறது என்று உணர முடியாமல் பேண்ட்டில் கை வைத்து நீண்ட நேரம் ஜிப் போட முயற்சித்து கொண்டு இருந்தார். அவருக்கு ஜிப் தொடும் உணர்வே இல்லை.

இதற்கு போய் மகனிடம் உதவி கேட்க வேண்டுமா என்ற கூச்சம் இருந்ததனால் அவராகவே பத்து நிமிடத்திற்கு மேலாக முயற்சித்தும் முடியவில்லை. எனக்கு போய் கேட்க தயக்கமாக இருந்தது. பிறகு ஒருவழியாக போட்டு விட்டு பேருந்தில் ஏறினார். எனக்கு வீட்டுக்கு வரும் வழியெங்கும் கலக்கமாகவே இருந்தது.

கண்டிப்பாக இதனை சரிசெய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குள் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.

இப்படியே பதிவு நெஞ்ச நக்குற மாதிரி போயிக்கிட்டு இருந்தா எனக்கே கடுப்பாகுது. அதனால் விஷயத்தை இத்துடன் விடுங்க. இத உங்களுடன் பகிர்ந்து கொண்டால் சற்று லேசாகும் என்று தோன்றியது. செய்து விட்டேன்.

ஆனால் இதற்கு எவனாவது வந்து செண்ட்டிமெண்ட்டா பின்னூட்டம் போட்டு நெஞ்ச நக்க பார்த்தா உடனடியாக நான் எழுதிக் கொண்டு இருக்கும் மரபுக்கவிதையின் திருத்தப்படாத பதிப்பை தங்களுக்கு மின்னஞ்சல் செய்து விடுவேன் என்று எச்சரிக்கிறேன்.

ஏற்கனவே புதுக்கவிதை எழுதி கவிஞனாகிவிட்ட நான் அடுத்த முயற்சியாக மரபுகவிஞனாகப் போகிறேன். பனைஓலையும் எழுத்தாணியும் கூட வாங்கி விட்டேன். இனி எழுத வேண்டியது தான்.

சாம்பிள் வேணுமா.

யாதுமார்க்கி யறிவில்லா செய்துணர்ந்து
மாமாங்கமாகி - சங்கடகரன் வீணென்று
செய்துணர்வான் செந்திலாண்டவன்

எப்பூடி

விரைவில் மரபுக்கவிதை வெளிவரப்போகிறது. அதற்கு விளக்கம் கொடுக்கும் அறிவாளிக்கு ஆலயமணி படத்தில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்புடப்பா கூரியர் அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்காக பட்டிக்காட்டானுக்கு மட்டும் ஊசிப் போன ஒயின் தரப்படும் என்பதை கம்பெனி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment