Tuesday 26 May 2015

பஞ்சேந்திரியா - என்னை இருட்டடிப்பு செய்த கேபிள் சங்கர் - பழசு 2012

அது ஒண்ணுமில்லீங்க. பதிவர் சந்திப்பு முடியும் சமயம் விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தனர். முதலில் ஏறிய நான் ஒரு போட்டோவில் மட்டுமே தெரிந்தேன். மற்றவர்களையும் அழைத்த போது வந்தவர்கள் மேடை முழுவதும் நிறைந்து நின்றனர்.

அப்போது கேபிள் அவர்கள் அவரது அருகில் நின்ற என்னை விட்டு விட்டு சற்று உயரத்தில் குறைந்த திடம்கொண்டு போராடு சீனுவை அவர் தோளில் கைபோட வாகாக எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.

கேபிளின் பின்னாடி இருளோன்னு ஒரு முகம் தெரியுதில்லயா, அதுதான் நான்

நாம வேற ஏற்கனவே ரோஸ் கலராச்சா. விளக்கு வெளிச்சமும் படாமல் கேபிளின் பின்னால் ஒரு இருட்டு உருவம் நிற்பது போல் ஆகிவிட்டது. குரூப் போட்டோவை எல்லோரும் வெளியிடுகின்றனர். அதில் நான் இருக்கும் இடம் இருளோன்னு இருப்பதால் நானும் இருப்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எனவே நான் அழகாக புகைப்படத்தில் தெரியக்கூடாது என்று கேபிள் அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறார். நான் வேறு அடுத்த விஜயகாந்த் மாதிரி இருக்கிறேன் என்று அனைவரும் பதிவர் மாநாட்டிற்கு வந்த அனைவரும் சொல்கின்றனர். யாராவது என் படத்தை பார்த்து விட்டு சினிமாவுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்றே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றேன்.

இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(கேபிளே தன்னை கலாய்க்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த சதிவேலையை பகிரங்கப்படுத்துகிறேன், அப்பாடா பத்த வச்சாச்சு)

--------------------------------

இந்த வார தத்துவம்


-------------------------------------------

நேற்று முன்தினம் மக்கள் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்தது. நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றும், நான் இருக்கும் இடத்திற்கே வந்து படப்பிடிப்பு நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

நாம பார்க்க தான் ஆஜாகுபானுவாக தெரிகிறோமே தவிர பயங்கர டக்கு பார்ட்டி. ஒரே சமயத்தில இருபது இட்லியை சாதாரணமாக முழுங்குகிறதும், பத்து நெல்மூட்டையை சட்டென வண்டியில் ஏற்றுவதும், கபடியில் சர்வசாதாரணமாக எதிராளியை தூக்கி வீசுவதும், களத்தில் முன்னாடி நின்று சண்டை செய்வதும் சாதாரணமான எனக்கு மேடையிலோ அல்லது காமிராவின் முன்நின்றோ பேசச் சொன்னால் பேஸ்மெண்ட், பில்டிங் ரெண்டுமே வீக்காகி ஆடும். கை கால் உதறும். நாக்கு வறண்டு போய் விடும். இதற்கு காரணம் நிறைய உண்டு. முதலாவது நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மை, அடுத்தது முன்பின் மேடையில் பேசி பழக்கமில்லாதது. எந்த கல்யாணத்திற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க மேடையேற சொன்னாலும் நாசூக்காக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

நானும் மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு பேசச் சென்றேன். படப்பிடிப்பும் துவங்கியது. முதல் புத்தகத்திற்கான விளக்கவுரைக்கே நான்கைந்து கட் விழ இயக்குனர் என்னை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

அவரை சிரமப்படுத்த விரும்பாமல் இது ஒன்றே போதும். நான் தெளிவாக பேச வேண்டியதை மனப்பாடம் செய்த பிறகு உங்களுக்கு போன் செய்கிறேன், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாடா தொல்லை விட்டது என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு சம்மதித்தார்.

நான் கண்டிப்பாக இது அரங்கேறாது. இப்படியே விட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் நேற்று இரவு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எடிட் செய்த பிறகு பார்க்கும்படியாக இருக்கிறது என்று கூறினார். அவ்வளவு சிரமப்பட்டு நான் கொடுத்த விளக்கவுரை நாளை காலை 08.45 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எந்த நேரமும் மீடியாவில் இருக்கும் நண்பர்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மீடியாவுடன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நான் திரையில் தோன்றுவது அத்தைக்கு மீசை முளைத்தால் மட்டுமே சாத்தியம்.

பார்த்து விட்டு குறையையும் நிறையையும் என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள்.

--------------------------------------

என்னுடைய மினியேச்சர்


-----------------------------------------

நண்பர்களே தெற்கு ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. மத்திய அரசு வேலைக்கு மிகசிறந்த வாய்ப்பு. கடைசி நாள் 25.09.2012. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பியுங்கள். சந்தேகமுள்ளவர்கள் எந்த வித தயக்கமுமின்றி என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்த விளக்கத்தை தங்களுக்கு அளிக்கிறேன்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment