Tuesday 26 May 2015

அட்டகத்தி - பழசு 2012

படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சான்று அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் இன்று காலைக்காட்சி ஹவுஸ்புல். எங்கு திரும்பினாலும் படத்தின் விளம்பரங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டதே இதற்கு காரணம். பெரிய நடிகர்களின் படங்களே ராக்கி திரையரங்கில் பாதி தான் நிறையும் காலத்தில் விடுமுறை தினம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது எனக்கு பயங்கர ஆச்சரியத்தை அளித்தது.

இவ்வளவு எதிர்பார்ப்பையும் படம் நிறைவேற்றியிருக்கிறதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும். படத்தில் கதை கத்தரிக்காய், மனதை உருக்கும் சென்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள், சமூகத்திற்கு தேவையான கருத்துகள், அதிர்ச்சியான க்ளைமாக்ஸ் என்று எந்த வெங்காயமும் கிடையாது. அட்டக்கத்தி என்ற பெயர் காரணம் என்னவென்றால் உதார் விடும் வெத்து பசங்களுக்கு வடசென்னை பகுதியில் வைக்கப்படும் பட்டப்பெயர்.

தேடிப்பார்த்து கதையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார். அவ்வளவு தான்.

படத்தின் கதை விவாதத்தின் போது கலந்து கொண்ட உதவி இயக்குனர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை சொல்ல அதனை இயக்குனர் மேம்படுத்தி ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து அதனை படத்தில் சுவைபட சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒருவனது வாழ்க்கையில் இவ்வளவு காதல் சொதப்பல்கள் இருக்காது. ஒன்னு ரெண்டு சொதப்பல்களிலேயே ஒருவனுக்கு ஞானம் பிறந்து விடும்.

தினேஷ் படத்தின் நாயகனாக வருகிறார். புறநகரில் ருந்து சென்னைக்கு படிக்க வரும் வாலிபனை இயல்பாக கண் முன் நிறுத்துகிறார். அவரது ஊரில் அவரைப் போலவே நான்கு வெட்டி நண்பர்கள். அவர்கள் அனைவரின் லட்சியம் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வது தான். பஸ்ஸ்டாண்டில் ஸ்டைலாய் ட்ரெஸ் செய்து கொண்டு நிற்பது, பஸ்ஸில் வரும் பெண்களின் பார்வைக்காக கையில் உள்ள புக்கைக் கொடுத்துவிட்டு புட்போர்ட் அடிப்பது, ஏரியாவிட்டு ஏரியா போய் அடி வாங்கிக் கொண்டு அழுவது, நிறைய தோல்விகள் கொடுத்த பாடங்களால் காதலை விட்டு விலகி கல்லூரியில் சேர்ந்து “ரூட்டு தலையாகி” அடிதடி ஹீரோயிசமாய் அலையும் போது, கராத்தே மாஸ்டரிடம் சரிமாத்து வாங்கி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வரும் போது, மச்சான் அமுதாடா என்று சொன்னவுடன் சட்டென திரும்பி பனியனால் முகம் துடைத்துக் கொண்டு சிரிப்பது என தினேஷ் என் கல்லூரி கால நண்பனாக அசத்தியிருக்கிறார்.

படத்தில் நாயகி என்று யாருமில்லை. நாயகி போல் வந்து தினேஷூக்கு அல்வா கொடுப்பவராக நந்திதா. புறநகருக்கு என்று ஒருனி ஸ்லாங் இருக்கிறது. சென்னைத் தமிழை விட சற்று வித்தியாசமாக பேசப்படும் தமிழ். அந்த ஸ்லாங்கில் இயல்பாக பேசி அசத்தியிருக்கிறார். பள்ளி மாணவியாக தினேஷை கொஞ்ச காலம் அலையவிட்டு கடிதம் கொடுக்கவரும் போது அண்ணா என்று சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது. கல்லூரிக்கு வந்ததும் சற்று மெச்சூரிட்டி வந்து தினேஷூடன் இயல்பாக பழகும் போதும் கவர்கிறார்.

படத்தில் நாயகிகளாக வருபவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் மனதை கவர்கிறார்கள். அதுவும் அந்த இரட்டை நாயகிகள், தினேஷ் அவர்களிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்னும் போது அவர்கள் அம்பத்தூர் என்றதும் தியேட்டரில் எழுந்த விசில் அடங்க ஐந்து நிமிடம் எடுத்தது.

அதிசயமாக ஒரு புதிய இயக்குனர் படத்தில் புதிய இசையமைப்பாளரின் பாடல் நன்றாக இருக்கிறது. அதுவும் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. எனக்கு ஆடி போனா ஆவணி பாடல் மிகவும் பிடித்திருந்தது.

என்னை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததற்கு காரணம் நான் சென்னையில் ஐசிஎப்பில் படித்தவன். என்னுடன் படித்த முக்கால்வாசிப் பேர் திருவள்ளூர் முதல் பட்டாபிராம் வரையுள்ள பகுதிகளிலிருந்து வருபவர்கள் தான். நான் ஹாஸ்டலில் தங்கியிருந்ததால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் ஏரியாவுக்கு செல்வேன். படத்தின் காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதால் தான். என் நண்பர்கள் கல்லூரிக்கு வரும் போதும் இதே போல் அரட்டையடித்துக் கொண்டு ரயிலில் வரும் பெண்ணை ஒரு தலையாக காதலித்தும் வருவார்கள். அதில் சதீஷ் என்பவன் தான் ரூட்தலை. அதை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தின் தனித்துவமே இயல்பான காதல் காட்சிகள் காதல் சொதப்பல் காட்சிகள் தான். சண்டை என்ற பெயரில் ஒரே குத்தில் 50 பேரை அடிக்க முயற்சிக்காமல் இருந்ததற்கு பூங்கொத்தே கொடுக்கலாம். தினேஷின் அப்பாவாக வருபவர் நான் வீரப்பரம்பரை என்று கெத்து காட்டி வாழை மரத்தை வெட்டுவதும், அவர் போதையில் தள்ளாடி சாப்பிடாமல் இருக்கும் போது மனைவி ஊட்டி விடுவதும் இயல்பாக இருக்கிறது.

குறை என்று சொல்லி நம் அறிவுஜீவித்தனத்தை காட்டுவதை விட இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம். நன்றி.

மொத்தத்தில் அட்டக்கத்தி படம் பார்க்க வேண்டிய படம் தான்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment