Sunday 24 May 2015

நான் ஈ - பழசு 2012

எப்பவுமே விமர்சனம் எழுதுறதுக்காக படம் பாக்கணும்னா முதல் காட்சி தான் போவேன். ஆனா போன வாரமே என் வூட்டம்மா "இந்தப் படத்துக்கு என்னையும் அழைச்சிக்கிட்டு போகணும் இல்லைனா அவ்வளவுதான்" அப்படின்னு மிரட்டி வச்சிருந்தாங்க. அதான் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து என்ர அம்மணியை அழைச்சிக்கிட்டு தியேட்டருக்கு போக வேண்டியதாயிட்டது.

ஷை படம் தெலுகுல வந்தப்பவே நான் ராஜமெளலிக்கு பரம ரசிகனாகி விட்டேன். அதன் பிறகு அவரது படம் என்றால் முடிந்த வரை முதல் காட்சி தான். சத்ரபதி, விக்ரமருக்குடு (தமிழ்ல சிறுத்தை), யமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா வரை எல்லாப்படமும் முதல் காட்சி பார்த்து விடுவேன்.

படம் தெலுகில் வெளியாகும் அன்றே தமிழிலும் வெளியாவதால் தமிழிலேயே பார்த்து விடலாம் என்று முடிவெடுத்து ராக்கிக்கு சென்றோம். பிரபல தமிழ் நடிகர் இல்லை, பிரபல தமிழ் இயக்குனர் இல்லை இருந்தாலும் திரையரங்கு 80 சதவீதம் நிறைந்திருந்ததது படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருந்த எதிர்ப்பார்ப்பினால் தான்.

படத்தின் கதை என்ன? நாம் ஒண்ணும் படம் பார்த்து தான் கதையை தெரிஞ்சிக்கணும் அப்படின்னுலாம் ஒன்னுமில்லை. டிரைலரிலேயே தெரிந்து விட்டது. நானியும் சமந்தாவும் காதலர்கள். வில்லனான சுதீப் நானியைக் கொன்று காதலை பிரிக்கிறார். நானி ஈயாக மறுஜென்மம் எடுத்து வந்து சுதீப்பை எப்படி பழிவாங்குகிறார் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் நானி உண்மையில் அழகாக இருக்கிறார். ஹான்ட்சம் என்ற வார்த்தைக்கு உரிய உடல்வாகு. நடிக்கத்தான் ஸ்கோப் கம்மியாக இருக்கிறது. படம் துவங்கிய அரை மணி நேரத்திற்குள் செத்து விடுகிறார்.

ஹீரோயின் சமந்தா, பாப்பா மாஸ்கோவின் காவிரி படத்தில் பூத்த பூ போல் அப்படி ஒரு ப்ரெஷ்ஷாக இருந்தார். இப்பொழுது சப்பிப்போட்ட மாங்கொட்டை போல் இருக்கிறார். ஏகப்பட்ட படம் அதற்குரிய கமிட்மெண்ட்ஸ். அதுவும் தெலுகில் என்றால் அதற்குரிய விலையை கொடுத்து தானே ஆக வேண்டும்.

வில்லனாக சுதீப் படத்திற்கென அவர் தனியாக நடிக்க வேண்டியதில்லை. செலிபரிட்டி கிரிக்கெட் லீக்கில் எப்படி இருந்தாரோ அப்படியே படத்திலும் வந்து போகிறார். கன்னடத்தில் வசூல் மன்னன் தமிழிலும் தெலுகிலும் மார்க்கெட்டை எதிர்பார்த்து காலை நுழைத்திருக்கிறார். இந்தப் படத்தை விசிட்டிங் கார்டாக வைத்து தான் அடுத்தடுத்து வாய்ப்பு தேட வேண்டும்.

படம் நன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. படத்தில் லாஜிக் என்ற ஒரு வஸ்துவை மறந்து விட்டு படத்துடன் மக்கள் ஒன்றி விடுகின்றனர். அந்த ஈயின் பழி வாங்கும் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் விசில் சத்தம் பறக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலமே நம்புவது போல் இருக்கும் காட்சியமைப்புகள் தான். ஈ காரை கவிழ்த்து விபத்தை ஏற்பத்துவது, சுதீப்பை தூங்க விடாமல் இம்சிப்பது, லாக்கரில் உள்ள பணத்தை எரிப்பது, வீட்டுக்குள் ஏகப்பட்ட தடைகள் இருந்த போதும் திறமையாக உள்ளே நுழைவது, மந்திரவாதி ஏவிவிட்ட பறவைகளை ஏமாற்றி கொல்வது எல்லாம் அதிகப்படியாக இல்லாம் இருப்பது தான் படத்தின் பலம்.

மந்திரவாதி வந்தவுடன் ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் பெரிசா கோலம்லாம் போட்டு ஜிகுஜிகுவென பூஜையை ஆரம்பித்து பொசுக்கென செத்துப் போகிறார்.

உண்மையில் கிராபிக்ஸ் என்பது என்னவெனில் அது படத்தில் இருப்பதே தெரியக்கூடாது. படத்தில் காட்சிகளுடன் இயல்பாக வர வேண்டும். அது சரியாக வந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் கூட. சந்தானம் ஒரே காட்சியில் படத்தில் வந்து விட்டு இறுதியில் படம் முடிந்த பின் இன்னொரு காட்சியிலும் வருகிறார். படத்தின் மார்க்கெட்டிங்கிற்காக நுழைக்கப்பட்டிருக்கிறார்.

படத்தை குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்து விட்டு வரலாம். சகுனிக்கு பல மடங்கு தேவலாம்.

நான் ஈ - சிங்கிளாக வந்த சிங்கம்

ஆரூர் மூனா

No comments:

Post a Comment