Sunday 24 May 2015

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே ஸ்டேஷன் - பழசு 2012

மூன்று வருடம் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவங்களை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியுமா, ஆம் முடியும். 15 வருடங்களுக்கு முன் நடந்தவை எல்லாம் இன்று வரை எனக்கு பல சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 1997 முன்பு வரை எனக்கு தெரிந்த சென்னை சைதாப்பேட்டையும், மேற்கு மாம்பலமும் மட்டுமே. எனது மாமாவும், சித்தியும் மேற்சொன்ன இடங்களில் குடியிருந்ததால் கோடை விடுமுறைக்காக வரும்போது அங்கு மட்டுமே தங்குவேன். வடசென்னை பக்கம் வந்ததே இல்லை.

12ம் வகுப்பு முடித்ததும் ஐசிஎப்பில் அப்ரென்டிஸ் படிக்க வேண்டும் என முடிவெடுத்த பின் சென்னைக்கு வந்து சென்ட்ரல் புறநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஏறி நான்கு ஸ்டேஷன் தள்ளி ஐந்தாவதாக வந்த பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் என்று பெயர் பலகையில் எழுதியிருந்த ஸ்டேஷனில் இறங்கினேன். என் வாழ்வில் நல்ல மற்றும் அதிர்ச்சியான சம்பவங்கள் அங்கே தான் நடக்க போகிறது என்று தெரியாமல்.

அதன் பிறகு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சேர்ந்தது எல்லாம் வேறுகதை, அது இந்த கட்டுரைக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். வகுப்பில் சேர்ந்து நண்பர்கள் செட்டான பிறகு வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஒன்று கூடி அரட்டையடிக்க தேர்ந்தெடுத்த இடம் லோகோ ஸ்டேஷன் தான். நாலரை மணிக்கு முடிந்ததும் ரூமுக்கு வந்து உடை மாற்றி சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தால் அரட்டை கச்சேரி முடிந்து திரும்ப இரவு 10 மணியாகி விடும்.

எங்கள் குழுவில் நந்தா என்றொரு நண்பன் அவன் கோலார் தங்க வயலில் இருந்து படிக்க வந்திருந்தான். அவனுக்கு எப்பொழுதுமே காதல் இளவரசன் என்ற நினைப்பு தான். நாங்கள் ஸ்டேசனில் அமரும் சமயத்தில் ஒரு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் பெண் 6 மணியளவில் ரயிலில் இருந்து இறங்கி வீடு செல்லும். பார்க்க மிக நன்றாக இருக்கும் அவள் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்.

நந்தா சில நாட்களிலேயே அந்த பெண்ணை கரெக்ட் செய்து விட்டான். அந்த பெண் பெரம்பூரில் ரயில் ஏறுவாள் என்பதற்காக முன்பே பெரம்பூர் சென்று அவளுடன் ரயிலில் வந்து இறங்கி வீடு இருக்கும் தெருமுனை வரை விட்டு வருவது தான் அவனது பணி. சில நாட்களில் அந்த விஷயம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து நாங்கள் அங்கு அமர்ந்திருக்கும் போது அந்தப் பெண்ணின் அம்மா அனைவரின் முன்பாக காறித்துப்பி விட்டு சென்றார்.

நாங்கள் எல்லோரும் ஏண்டா எங்கள் மானத்தையும் சேர்த்து வாங்கினாய் என்று மொத்து மொத்தென்று மொத்தினோம். எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு ஒரு வாரத்திலேயே மற்றொரு பெண்ணை கரெக்ட் செய்தான். அந்தக்காதலும் ஒரு மாசம் மட்டுமே. மீண்டும் அந்தப் பெண்ணின் பெற்றோர் காறித்துப்புவது, நாங்கள் அவனை மொத்துவது என்றே இறுதி ஆண்டு வரை காதலித்துக் கொண்டிருந்தான். கடைசி வரை ஒரு காதலும் செட்டாகவில்லை என்பது தான் அவனுக்கு வருத்தமான விஷயம்.

ஸ்டேசனுக்கு வெளியே உள்ள சம்சா கடையில் இருந்து சம்சாக்கள் வாங்கி வந்து அந்த வழியாக செல்லும் ரயில்களில் உட்கார்ந்திருக்கும் அழகான பெண்களுக்கு பழிப்பு காட்டி சாப்பிடுவது சுவையான விஷயம். சில பெண்கள் காறித்துப்புவதும் துடைத்துக் கொள்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

இது போன்ற உருப்படாத விஷசயங்கள் பல ஸ்டேசனில் நடந்தாலும் பரிட்சை சமயங்களில் படிப்பதற்காக மதிய வேளைகளில் ஸ்டேசன் பெஞ்ச்சில் அமர்ந்து படித்தால் அப்படியே மனதில் நிற்கும். அந்தளவுக்கு அமைதியான ஸ்டேசன் அது.

அதுவரை பார்த்திராத ஒரு கோர விபத்து நடந்தேறியதை அங்கு தான் பார்த்தேன்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment