Sunday 24 May 2015

இளம்பெண்கள் காதலின் விளைவுகள் - பழசு 2012

இந்த பொண்ணுங்க இருக்காங்களே அய்யய்யய்யோ, ஒரு குடும்பத்தினை சுழற்றி எறிந்து விட்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் காதலன் நல்லவனா இல்லையா என்று விசாரிக்காமல் ஓடுவதில் கில்லாடிகள்.

என் சகோதரனின் திருமணத்திற்காக திருப்பதி சென்றிருந்த போது இந்திரனை பார்த்தேன். இந்திரன் என்னை விட எட்டு வயது இளையவன். திருவாரூரில் நாங்கள் இருந்த தெருவிலேயே குடியிருந்தவன். அவனது அண்ணன் சந்திரன். ஒரே தங்கை சுஜாதா, அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டார். அவனது அம்மா எங்கள் வீடு உட்பட சில வீடுகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். சந்திரன் ஒரு வெல்டிங் கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பிறகு சொந்தமாக கடை வைத்து, திருவாரூரில் ஒரு கட்சியில் பதவியும் பெற்று குடும்பத்தை உயர்த்தினான்.

இந்திரன் வயதில் இளையவனாக இருந்தாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். நான் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்தால் நான் ஊருக்கு திரும்பும் வரை என்னுடன் தான் இருப்பான். நான் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த போது இந்திரனை சென்னைக்கு கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து பார்த்தேன். சில நாட்களிலேயே எனக்கு திருவாரூரே போதும்ணே என்று கூறி ஊருக்கு சென்றவன். ஊரில் சிறிது சிறிதாக தண்டல் விட ஆரம்பித்து அவனும் திருவாரூரில் பைனான்சியராக ஒரளவுக்கு செட்டிலாகி விட்டான். சந்திரன் திருமணமாகி விட்டதால் தனியாக வசித்து வந்தான். இரண்டு வருடங்களாக இந்திரனையும் அவன் அம்மா, தங்கையையும் பார்க்கவே முடியவில்லை.

திருப்பதியில் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் என்ன செய்கிறாய், குடும்பம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தேன். சுஜாதா முதுநிலை பட்டப்படிப்பு சென்னையில் படிப்பதாகவும் அதன் படிப்பு காரணமாக சென்னையில் வீடு பார்த்து அம்மா தங்கையுடன் வந்து விட்டதாகவும், தான் ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிவதாகவும் கூறினான். சந்தோஷமாக ஊருக்குள் பொறுப்பின்றி திரிந்து கொண்டு தினம் ஒரு சண்டை வலித்துக் கொண்டிருந்த ஒருவன் பொறுப்பாக குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் என்னுடன் இருந்தவன் சென்னையில் என்னை சந்திப்பதாக கூறி திருப்பதியில் விடை பெற்றுக் கொண்டான்.

நேற்று வந்து என்னை வீட்டில் சந்தித்தான். நேற்று இரவு தாகசாந்தி நடைபெற்றது. ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் தான் சென்னை வந்த காரணத்தை தெரிவித்தான். எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடன் படித்தவனுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டு அவனுடன் ஊரை விட்டு கம்பி நீட்டி விட்டாள். வெளியில் தெரிந்தால் தூக்கு போட்டு சாக வேண்டும் என்று பயந்து குடும்பம் இரவோடிரவாக வீட்டை காலி செய்து சென்னை வந்து விட்டார்கள், ஊரில் இருப்பவர்கள் கேட்டால் அந்தப் பெண் படிப்பிற்காக சென்னை வந்ததாக கூறி வருகிறார்கள். இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் என்ன செய்யலாம். கேட்டவுடன் எனக்கே அரிவாளை எடுத்து வெட்டிப்போடணும் போல கோவம் வருகிறதே. அந்த குடும்பத்திற்கு எப்படியிருக்கும்.

அடுத்த சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு மிகநெருங்கிய சொந்தத்தில் நடந்தது. எனக்கு மிகநெருங்கிய உறவுக்காரப்பெண். பெயர் செண்பகம். சென்னையில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தாள். வீட்டிற்கு ஒரே பெண். மிகுந்த செல்லம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தனர். கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது ஒரு நடிகையின் தம்பியுடன் ஒடிப்போய் பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து வரை போய் அவனுடன் சென்றாள். இரண்டு மாதத்தில் அவன் சரியில்லை என்று திரும்பி வந்து விட்டாள். அவளுக்காக அவளது பெற்றோர்கள் சென்னையை காலி செய்து விட்டு திருச்சி சென்று செட்டிலாகி விட்டனர்.

முதல் சம்பவத்தில் பிறந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம் தலையெடுத்து ஊருக்குள் மதிக்கிற மாதிரி வந்து கொண்டிருந்த போது அந்த பெண் செய்த தவறால் இரவோடு இரவாக வாழ்ந்த ஊரை விட்டு காலி செய்ய வேண்டியிருந்தது. இரண்டாவது சம்பவத்தில் பெண் தேர்வு செய்த பையனின் குடும்பமே விபச்சாரம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லாம் சொல்லி உறைக்காத உண்மை அவள் கண்ணால் பார்த்த பிறகு தான் புரிந்தது. இன்றைக்கு எவனாக இருந்தாலும் இந்த விஷயம் புரிந்தால் அவளை தப்பாகத்தானே பார்ப்பான்.

பசங்க இருக்கானுங்களே ஒரு பொண்ணை பார்த்தவுடனே காதலில் விழுகின்றனர். அவளுக்காக உயிரையும் கொடுக்க தயாராகின்றனர். ஆனா பொண்ணுங்க தன் பின்னால் சுற்றுபவர்களில் ஒருவனை கவனமுடன் பரிசீலித்து தேர்வு செய்கிறாள். ஆனால் அவன் கண்டிப்பாக தப்பானவனாக இருக்கிறான். தனது படிப்பையெல்லாம் முடித்து விட்டு தனக்கென ஒரு நிலை வந்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் என்ன குடியா முழுகி விடும். இனிமேலாவது திருந்த முயற்சிங்க. பசங்களை ஏமாத்திட்டாவது போங்க. பரவாயில்லை. கொஞ்ச நாள் தாடி வச்சிருப்பானுங்க, அடுத்த பொண்ணை பார்த்தான் என்றால் உன்னை மறந்துடுவான். குடும்பம் முக்கியம் என்பதை மட்டும் மறந்து விடாதே.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment