Sunday 24 May 2015

ஜூலாயி - தெலுகு - பழசு 2012

சென்னையில் பரவலாக தமிழ்படங்களுக்கு இணையாக ஜூலாயி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுவே படத்தின் எதிர்பார்ப்பிற்கு அடிகோலியது. அதுவும் இல்லாமல் ராக்கி காம்ப்ளக்ஸில் பெரிய திரையரங்கான ராக்கியில் சாதாரணமாக தமிழ்ப்படங்களே திரையிட யோசிப்பார்கள். இந்தப்படம் திரையிட்டிருந்ததும் கவனிக்க வைத்தது.

நம்ம வீட்டம்மா வேறு இந்த படத்தின் பாடல்களை ஏற்கனவே இணையத்தில் டவுன்லோட்டிட்டு கேட்டு பிடித்ததால் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று முன்பே ஆணையிட்டு இருந்தார்கள். நாம் தான் வீட்டம்மா சொல் தட்டாத பிள்ளையாச்சே. நேற்றே குடும்பத்துடன் படத்தை பார்த்தாச்சு. ஆனால் பாருங்கள் நேற்று பதிவு எழுதுவதற்கு நேரமில்லாததால் இன்று எழுத வேண்டியதாகி விட்டது.

அல்லு அர்ஜூனின் மற்ற படங்களை விட எனக்கு ஆர்யா -2 மிகவும் பிடிக்கும். சிம்புவைப் போல் தெலுகில் அல்லு அர்ஜூன் எத்தனை பிளாப்புகளை கொடுத்தாலும் பரபரப்பான ஸீரோ அவரே. அப்படிப்பட்டவரின் திருமணத்திற்கு பிறகு வரும் முதல்படம் இது. இதற்கு முன் வந்த படமான பத்ரிநாத் அட்டர் பிளாப். இவ்வளவு இருந்தும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு குறையவேயில்லை.

படத்தின் இயக்குனரான திரிவிக்ரத்தின் முந்தைய படங்களில் அத்தடு எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டைலிஷ்ஷான மேக்கிங் என்று ஒன்று உள்ளதென்றால் இந்தப் படத்தில் நீங்கள் காண முடியும். அதுபோலவே கலீஜா பெரும்பாலானவர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

இவ்வளவு எதிர்பார்ப்பிற்கிடையே வெளியா இந்தப் படம் நிறைவேற்றியிருக்கிறதா என்றால் அந்தளவுக்கு இல்லையென்றே சொல்வேன்.

பொதுவாக மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்றால் இந்தப் படத்தில் வில்லனுக்கோ ஏழறிவு. ஹீரோவுக்கோ ஏழரையறிவு. பார்ப்பவர்களுக்கோ ஏழரை. வக்காளி படத்தின் திரைக்கதையை இருவருக்கு மட்டுமே இயக்குனர் சொல்லியிருப்பார் போல. படத்தின் அடுத்த சீன்களை மாற்றி மாற்றி இருவரும் சொல்கிறார்கள். ஹீரோ என்ன செய்வார் என்று வில்லன் சொல்கிறான். வில்லன் என்ன செய்வான் என்று ஹீரோ சொல்கிறான்.

அல்லு விரைவான வழியில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். அப்பாவிடம் தாங்கள் கொடுக்கும் பத்தாயிரத்தை இரண்டு மணிநேரத்திற்குள் ஒரு லட்சமாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறான். அதற்காக அவன் பெட்டிங் சென்டருக்கு செல்லும் வழியில் வில்லனை(சோனு சூட்) சந்திக்கிறான். அவனின் பேச்சு, நடை, செயல் இவற்றை வைத்து அவன் வங்கியில் பணத்தை திருட போவதை கணிக்கிறான்.

பெட்டிங் சென்டரில் நடக்கும் பிரச்சனையில் போலீசிடம் வங்கி கொள்ளை நடக்கப் போவதை சொல்கிறான். வில்லனின் வங்கிக் கொள்ளை முயற்சி தடுக்கப்படுகிறது. வில்லனின் தம்பி கொல்லப்படுகிறான். பணமும் பறிபோகிறது. இவ்வளவுக்கும் காரணமான அல்லுவையும் அவனது குடும்பத்தையும் கொல்லுவதாக சவால் விடுகிறான். அவன் செய்தானா, அல்லு அதனை தடுத்தாரா என்பதே படத்தின் கதை.

அல்லு அர்ஜூன் பிரமாதமாக நடித்துள்ளார். நடனத்தில் சொல்லவே வேண்டியதில்லை, அசத்துகிறார். காமெடியில் பிரம்மானந்தத்துடன் சேர்ந்து கலக்குகிறார். ஆனால் ஒரு மிடில் கிளாஸ் வாலிபனாக வரும் அவர் எப்படி போலீசின் துப்பாக்கியை எடுத்து அவ்வளவு லாவகமாக சுடுகிறார் என்பது தான் நெருடுகிறது.

கதாநாயகியாக இலியானா, வயதாகிக் கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. போக்கிரியில் இருந்த ப்ரெஷனஸ் இதில் சுத்தமாக இல்லை. நல்லா வியாதி வந்த ஒட்டடைக்குச்சி போல் இருக்கிறார். கதாபாத்திரமும் அந்த அளவுக்கு பெரிதாக இல்லை. வருகிறார் போகிறார் அவ்வளவே.

படத்தில் எல்லோரையும் தாண்டி, ஏன் ஹீரோவையும் தாண்டி வசீகரித்திருப்பவர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே. பயந்தாங்கொள்ளி ஐபிஎஸ் ஆபிசராக வந்து அதகளம் பண்ணியிருக்கிறார். அல்லு அசால்ட்டாக வில்லன் ஒருவனை இவரின் கையில் உள்ள துப்பாக்கியை பிடுங்கி கொன்று விட்டு அவர் கையில் மீண்டும் திணித்ததும் அவர் முழிக்கும் முழி இருக்கிறதே ஏஒன். மேக்கப்பும் அவ்வாறே. ஹீரோயினை விட இவருக்குத்தான் பவுடர் செலவு அதிகமாகி இருக்கும் போல.

பிரம்மானந்தம் காமெடி நடிப்பில் வழக்கம் போல பின்னியிருக்கிறார். ஒரு பெண்மணியிடம் செயின் ராப்ரி பண்ண முயற்சித்து அடி வாங்கும் இடத்தில் விசில் பறக்கிறது. அது போலவே நாராயணனும் அவர் பங்கிற்கு அசத்தியிருக்கிறார்.

வில்லனாக சோனு சூட் ஆரம்பத்தில் அல்லுவுக்கு இணையாக பில்ட் அப் கொடுத்து கடைசியில் சப்பென்று முடித்து கொன்று விடுகிறார்கள். வாய்பேசாத, காசு கேட்காத பெண்ணாக வரும் வில்லியை பயங்கர பில்ட்அப்பாக காண்பித்து பொசுக்கென்று ஆக்கி விடுகிறார்கள்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே பயங்கர ஹிட். எங்க வீட்டில் மட்டும் சூப்பர் ஹிட். நடனத்தில் பல புதிய ஸ்டெப்களை போட்டு அசத்துகிறார்கள். அடுத்த சிம்பு படத்தில் வந்தாலும் வரும்.

படத்தில் அருமையாக காமெடி எடுபட்டிருக்கிறது. ஆனால் அதற்காக இந்தளவுக்கு கூடை கூடையாக காதில் பூ சுற்றியிருக்கக் கூடாது.

ஜூலாயி - பிடித்திருக்கிறது, ஆனால் பிடிக்கவில்லை.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment